பொட்டலத்தில் என்ன இருக்கிறது?


“”பொட்டலத்தில் என்ன இருக்கிறது?” மகான் கேட்கவும் இல்லை பார்க்கவும் இல்லை””

மகாபெரியவா எப்போது எந்த பக்தனுக்கு எந்த பக்தைக்கு அருள் பாலிப்பார் என்று யாருக்குமே தெரியாது தம் முன் நிற்கும் பக்தர்களின் மன ஓட்டம் எப்படி இருக்கும் என்பதைத் துல்லியமாக அறிந்த மகா பிரபு அவர் .

புதுக்கோட்டை ராதா ராமமூர்த்தி எனும் பக்தையின் அனுபவம் இதற்கு ஒரு சான்று

தொடர்ச்சியாக ஸ்ரீமடத்திற்கு வந்து மகானை தரிசித்து மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருப்பவர் . மகானை தரிசிக்க செல்லும் போதெல்லாம் அவருக்கு முன் எதையாவது சமர்ப்பிக்க வேண்டும் என்று காணிக்கையை எடுத்துப் போவதில் அந்த பக்தைக்கு அதீத மகிழ்ச்சி.

ஒரு முறை தரிசனத்திற்குப் போகும் போது தன் மனதில் தோன்றியபடி, சிறிய அருகம்புல் மாலையைத் தொடுத்து ஓரத்தில் அரளிப் பூவை பார்டர் ஆக அமைத்து அழகிய மாலையாக தொடுத்தார், மாலையோடு கொஞ்சம் கல்கன்ன்டும் எடுத்துக் கொண்ட அந்த பக்தை,

இரண்டையும் தனித்தனி பொட்டலங்களாக கட்டி தரிசனத்திற்கு சென்றபோது மகானின் முன் வைத்து சமர்பித்தார் எட்ட நின்று தரிசித்தார் .

அதை எப்போது எடுத்துக் கொள்ளப் போகிறாரோ என்று கத்துக் கிடந்த பக்தைக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது, இரண்டு பொட்டலங்களையும் சற்று தூரம் தள்ளி வைத்து விட்டார் , மகான் அதில் என்ன இருகின்றது என்றும் பார்க்கவில்லை, அது யாருடைய கண்களுக்கும் புலப்படவில்லை.

அதற்குள் இருப்பதை மகான் அறிவார் என்பதை நினைத்துகொண்டு பக்தை ஓரமாக நின்றுகொண்டிருந்தார், எட்டு மணிக்கு வந்த பக்தை மணி பத்து ஆகியும் அப்படியே நின்று மகான் அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் வரை அங்கிருந்து நகருவதில்லை என்ற உறுதியோடு இருந்தார் என்றே சொல்லலாம்.

சுமா பத்து மணிக்கு ஒரு பெண் மகானை தரிசிக்க வந்தார் அந்த பெண்மணி கையில் ஒரு வெள்ளிக் கவசம், பிள்ளையாருக்கு போட்ட வேண்டிய கவசம் மகானின் உத்திரவுப்படி அந்தபெண்ணின் ஊர்கோவிலில் பிள்ளையாருக்கு மிகவும் நேர்த்தியான வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டு இருந்தது , மகா பெரியவர் அனுக்கிரகத்திற்காக அதை கொண்டு வந்து இருந்தார் .

அந்தக் கவசத்தை தன் கையில் வாங்கிய மகான் தன் மடியில் வைத்துக் கொண்டார் , பிறகு மடத்து சிப்பந்தியை அழைத்து எட்ட இருந்த இரு பொட்டலங்களைக் காட்டி “அதை எடு ” என்றார் .

ராதா ராமமூர்த்தியை தவிர அந்த பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது அல்லவா

அதில் ஒரு பொட்டலத்தை பிரிக்கச் சொன்னபோதுதான் வெள்ளிப் பிள்ளையார் கவசத்திற்கே சொல்லி வைத்தாற்போல் ஒரு அருகம்புல் மாலை அதிலிருந்ததை எல்லாரும் கண்டனர்

இதில் அதிசயம் என்னவென்றால் ”பொட்டலத்தில் என்ன இருக்கிறது?” மகான் கேட்கவும் இல்லை பார்க்கவும் இல்லை ஆனால் அது பிள்ளையாருக்கு உரிய மாலை என்று எப்படி தீர்மானித்தார்? அதுதான் மகாபெரியவாளின் அருட்பார்வை

மாலையை அந்த வெள்ளிக் கவசத்திற்கு மகான் சாத்தியபோது கச்சிதமாக அந்த பிள்ளையாருக்கே அளவெடுத்து தொடுத்தது போல் அமைந்திருந்தது. மாலையுடன் அந்த வெள்ளிக் கவசத்தை தமது திரு மார்பில் பொருத்தி வைத்துக் கொண்டு நாலா புறமும் திரும்பி திரும்பி ஸ்ரீபெரியவா தரிசனம் கொடுத்தபோது எல்லா பக்தர்களுக்கும் அது ஆனந்தமாக இருந்தது ஆனால் ராதா ராமமூர்த்தி
என்ற பக்தைக்கு அந்த ஆனந்தம் பன்மடங்கு அதிகமாக இருந்தது .

எங்கிருந்தோ வந்த புதுக்கோட்டை ராதா என்னும் பக்தை மனதில் மகானுக்கு அருகம்புல் மாலையைச் சமர்பிக்க வேண்டும் என்று தோன்ற வேறொரு பக்தை அதேசமயம் வெள்ளிப் பிள்ளையார் கவசத்தை கொண்டுவந்து மகானின் அனுக்கிரகம் பெற வந்து நிற்க, பொட்டலத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாதவராக இரண்டு மணி நேரம் மகான் நாடகமாட ஆனால் எல்லாம் இதற்குதான் என்று இரு பக்தைகளின் மனபூர்வமான பக்திக்கு அங்கீகாரம் அளித்தது போன்று அமைந்தது இந்த சம்பவம்.

−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?
காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்