“ சங்கரா, என் சங்கரா! ஒன்னையும் பார்ப்பேனா

“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!”-பாட்டி

“ இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு! நீ …..வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா ……இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி …….வந்திருக்கேன்” -பெரியவா

(நெகிழ்ச்சியே இறுகி உருவான நிகழ்ச்சி)

பல முறை போஸ்ட் செய்யப்பட்ட அலுக்காத சம்பவம்

கட்டுரை ஆசிரியர்-ரா.கணபதி
கருணைக் கடலில் சில அலைகள்-புத்தகம்.

.
நெகிழ்ச்சியே இறுகி உருவான நிகழ்ச்சி.. நிகழ்ந்த இடம் திருச்சி தேசீயக் கல்லூரி உயர்நிலைப் பள்ளீயா, மதுரை ஸேதுபதி ராஜா உயர்நிலைப்பள்ளீயா என்று சரியாக நினைவில்லை.

ஸ்ரீமட முகாமுக்குள்ளே ஏதோ முக்கியமான ஆலோசனை நடந்ததை முன்னிட்டு வெளியே தர்சன “க்யூ’ சிறிது நேரமாகநிறுத்தி வைக்கப்பட்டிருந்தது..க்யூ விலே ஒரு பாட்டியம்மை. பாட்டிப் பாட்டி என்றே சொல்லலாம். நூற்றுக்கு மேல் பிராயத்தாளாயிருக்கலாம். டகாரமாகக் கூனிக் குறுகியவள் ஒரு கழியைப் பிடிக்க மாட்டாமல் பிடித்து நிற்கிறாள்

. “ சங்கரா, என் சங்கரா! ஒன்னையும் பார்ப்பேனா, பார்க்காமையே போயிடுவேனான்னு தவிச்சிண்டிருந்தேன். ஊரைத்தேடி வந்தே ! வந்தியேன்னு தரிசனம் பண்ண வந்தேன். நிறுத்தி வெச்சுட்டியேடா சங்கரா! “ என்று ஆவி சோரக் கூவிக்கொண்டிருந்தாள்.

வெளியிலிருந்து முகாம் ஜாகைக்குள் போய்க்கொண்டிருந்தார் ஸ்ரீ சாம்பமூர்த்தி சஸ்திரிகள். அவர் மஹாபெரியவாளின் பூர்வாஸ்ரமத் தம்பி. அந்த ரத்த பந்தத்வத்திற்கு ஏற்ப நல்ல இதயக்கனிவு பெற்றவர். பாட்டியின் தாபக்குரல் கேட்டதும் நடையை விரைவு படுத்தி, உள்ளே சென்றார். முக்யமான ஆலொசனையிலிருந்த ஸ்ரீசரணரிடம் “ வெளியிலே ஒரு பாட்டி, நூறோ, நூத்திருபதோ, என்ன வயசிருக்குமோ, பெரியவா தரிசனத்துக்காகத் தவிச்சிண்டு நிக்கறா” என்றார்.

அவர் சொல்லி முடித்துக்கூட இருக்க மாட்டார், பெரியவாள் புறப்பட்டு விட்டார், புயலாக!

“ நிறுத்தி வெச்சுட்டையேடா சங்கரா!” — நிறுத்தாமல் சொல்லிக்கொண்டிருந்த பாட்டியிடம் சென்று அணுக்கத்திலும் அணுக்கமாக நின்று, “ பாட்டி! இதோ உன் சங்கரன் வந்துட்டேன், பாரு! நீ வந்துருக்கேன்னு தெரியாம உள்ளே காரியமா இருந்துட்டேன். தெரிஞ்ச உடனேயே ஓடி வந்திருக்கேன்” என அன்பின் சார சாரமாக அமுத மொழி கூறினார் அருளாளர்.

“ வந்துட்டியா சங்கரா!” என்று அவர் கைகளைப் பாட்டி இறுகப் பிடித்துக்கொண்டு விட்டாள்! அவரது பதின்மூன்றாம் பிராயத்திற்கு முன் தாய் மஹாலக்ஷ்மியம்மாள் பிடித்த கைகளை, சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் இன்னொருவர் பிடித்தது!

முகத்தைத் தூக்கி ஸ்ரீசரணரின் திருமுகம் கண்ட விருத்தாம்பிகை, “எனக்கோசரம் நீ ஓடோடி வந்து எதிற்கே நின்னும் இந்தக் கண்ணு மங்கல்ல தெளிவாத் தெரியல்லையே! என்னப்பா, நீதான் நல்ல கண்ணைக் குடுத்துக் காட்சி தரணும் “ என்றாள்.

அது நல்ல வெயிலடித்த சமயம். ஆனாலும் க்யூ வரிசைக்காரர்களுக்கு மேலெ கூரை அமைக்கப்ப்பட்டிருந்தது. பக்த பராதீனர் சட்டென்று அந்த கூரைக்கு வெளியே துள்ளீ சுடு வெய்யிலில் நின்றார். பாதுகை அணீயாத பாதத்துடன்!

“ இப்பத் தெரியறதோன்னோ பாட்டி?” என்றார்.

“நன்னாத் தெரியறது, என்னப்பா, நன்னாத் தெரியறது!” என்ற பாட்டி கன்னத்தில் படபடவென்று போட்டுக்கொண்டாள்.

பெரியவாள் தன் முகத்தை வெயில் படுமாறு பல கோணங்கள் தூக்கி, தழைத்து, திருப்பியெல்லாம் காட்டி, முழு உடலையே திருப்பி முதுகுப்புற தரிசனமும் தந்தார்.

என்ன சொல்கிறோமென்றே தெரியாமல் உணர்ச்சிப்பெருக்கில் மூதாட்டி குழறிக் குழறி ஏதோ சொல்லி அழுது ஆனந்தித்தாள்.

ஸ்ரீசரணர் மீண்டும் அவளை நெருங்கி வந்து , “நன்னாப் பாத்துட்டயா பாட்டி! நான் போகலாமா?” என்றார்.

“பாத்துண்டேம்பா, பாத்துண்டேன். இந்த அனாமதேயத்துக்கும் ,கருணாமூர்த்தி , ஒன் காட்சி குடுத்துட்டே. ஒன்னைப் பாக்கணும் பாக்கணும்னுதான் உசிரை வெச்சிண்டிருந்தேன். பார்த்துட்டேன். என்னை எடுத்துக்கோ அப்பா, என்னை எடுத்துக்கோ!” என வேண்டினாள் அந்த பரம பக்தை.

“ பாட்டீ! அதுக்கான ஸமயம் வரச்சே எடுத்துக்கலாம். இப்போ ஒன்னை, நீ இருக்கிற எடத்துலே கொண்டு விடச் சொல்றேன். போயி ஸ்வாமி ஸ்மரணையாகவே இருந்திண்டிரு. மறுபடி என்னைப் பார்கணும்னு ஓடி வராதே! நான் ஒன்னை விட்டு எங்கேயும் போகாம எப்போவும் ஒன் கூடவே தான் இருந்துண்டிருப்பேன்” என்று வாக்குதத்தம் தந்தார், க்ருபா வர்ஷர்.

தமது அடக்க குணத்தினால் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும்போதும் ,அடக்கமாகவே வார்த்தைகளை உபயோகிக்கும் ஸ்ரீசரணரிடம் இப்பேர்பட்டதொரு வாக்கு பெற்ற பாட்டியம்மையின் பாக்யத்திற்கு ஈடேது!